மீனவர்கள் மீட்பில் அரசு இயந்திரம் போர்கால அடிப்படையில் இயங்கி வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மீனவர்கள் மீட்பில் அரசு இயந்திரம் போர்கால வேகத்தில் இயங்கு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை : கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் மீட்புப் பணியில் அரசு இயந்திரம் போர்கால அடிப்படையில் இயங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பல மீனவர்கள் கடலில் காணாமல் போய் உள்ளனர். இவர்களில் பலர் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கரை ஒதுங்கி உள்ள நிலையில், இன்னும் பல மீனவர்கள் நிலை குறித்து தெரியவில்லை.
இதனால் மத்திய மாநில அரசுகள் கப்பல்கள், விமானங்கள் மூலம் தேடுதல் பணியை மேற்கொண்டு உள்ளன. இதுகுறித்து இன்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அ.இ.அ.தி.மு.க.,வை யாராலும் எந்த காலத்திலும் அழிக்க முடியாது என்றும், இன்று கூட 4000 கல்லூரி மாணவர்கள் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீனவர்கள் மீட்புப்பணி குறித்து கேட்டபோது, மீனவர்களை மீட்கும் பணியில் அரசு இயந்திரம் போர்கால வேகத்தில் செயல்பட்டு வருவதாகவும், அதில் எந்த தொய்வும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், விரைவில் காணாமல் போன அனைத்து மீனவர்களும் மீட்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
காணாமல் போன மீனவர்கள் குறித்த முழுபட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், கடலில் காணாமல் போன கடைசி மீனவரை மீட்கும் வரையிலும் இந்த தேடுதல் பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.