தமிழக அரசு ஊழியர்களின் 9 மாத பேறுகால விடுப்புக்கான அரசாணை வெளியீடு
சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் 9 மாத பேறுகால விடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பேறுகால விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதகாலமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி அதிமுக ஆட்சி மீண்டும் வந்த உடன் கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.
அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள் தான். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
பெண் ஊழியர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க, 1980-ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தினை 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன்.
எங்களது தேர்தல் அறிக்கையில் 'மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும்' என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம்.
அதனை செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளங் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறு கால சலுகையாக வழங்கப்படும் 6 மாத கால மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்" என்றார். இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.