தலித் பெண் சமையலர் மீது பொய் புகார்.. அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது.. பின்னணி என்ன?
அவினாசி அருகே தலித் பெண் சமையலர் பாப்பாள் மீது பொய் புகார் அளித்த பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவினாசி: அவினாசி அருகே அரசுப் பள்ளி தலித் பெண் சமையலர் சத்துணவு சமைத்ததில் பல்லி விழுந்ததாக போலீஸில் பொய்யான புகார் அளித்த பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த மாதம் தலித் பெண் பாப்பாள் சமையலராக பணி நியமனம் செய்யப்பட்டார்.
பாப்பாள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த ஊர் ஆதிக்க சாதியினர் பாப்பாள் சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பாப்பாள் அரசுப் பள்ளியில் சமையலராக வேலை செய்வதில் தடை ஏற்பட்டது. மேலும், அந்த ஊர் ஆதிக்க சாதியினர் பாப்பாள் சத்துணவு சமைத்தால் தங்களுடயை பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டோம் என்று கூறினர்.
இதனால், அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் பாப்பாளை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தபெதிக, விசிக மற்றும் தலித் அமைப்புகள் பாப்பாளுக்கு ஆதரவாகவும் பள்ளியில் நிலவும் சாதி பாகுபாட்டை எதிர்த்தும் போராட்டத்தில் இறங்கினர்.
இதைத்தொடர்ந்து, பாப்பாள் மீண்டும் அதே பள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்டார். பாப்பாள் சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமலைக் கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் 90 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாப்பாள் சமைத்த சத்துணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலா சத்துணவில் பல்லி விழுந்திருப்பதாகக் கூறி மாணவர்களை சாப்பிடாமல் தடுத்துள்ளார். மேலும், தலைமை ஆசிரியை சசிகலா சமையலர் பாப்பாள் கவனக்குறைவாக சத்துணவு சமைத்ததால் சாப்பாட்டில் பல்லி விழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
அவினாசி காவல் நிலைய போலீஸார் பாப்பாள் சமைத்த சத்துணவில் பல்லி விழுந்தது தொடர்பாக விசாரித்தனர். பின்னர், பல்லி விழுந்ததாக கூறப்பட்ட சத்துணவை சேகரித்து கோவையில் உள்ள உணவுப்பொருள் ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனர்.
இதைத்தொடர்ந்து, பாப்பாள், பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மீது புகார் அவினாசி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் தலைமை ஆசிரியை சசிகலா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் சசிகலா கைது செய்யப்படுவதற்கு என்ன காரணம் பின்னணி என்ன என்று பார்ப்போம்.
பாப்பாள் அளித்த புகாரில், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வழக்கம் போல தான் பள்ளியில் சத்துணவு சமையல் செய்தபின் மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கியுள்ளார். அப்போது, ஏற்கெனவே சாதி காரணமாக காந்தாயிபாளையத்தைச் சேர்ந்த மாணவி சத்துணவு சாப்பிடாமல் சத்துணவை வாங்கி கிழே வைத்துவிட்டு கழிப்பறைக்கு விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கே இருந்த தலைமை ஆசிரியை பவித்ராவிடம் சத்துணவில் பல்லி விழுந்துள்ளது என்று கூறி மாணவர்களை சாப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும், மாணவி பவித்ராவின் சாப்பாட்டு தட்டில் பல்லி விழுந்திருப்பதை தனது செல்போனில் போட்டோவும் எடுத்துக்கொண்டுள்ளார்.
அதோடு சசிகலா ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அதற்குள் மாணவர்கள் முழுமையாக சத்துணவை சாப்பிட்டு முடித்துள்ளார். மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்கள் சாப்பிட்ட அதே உணவைத்தான் சமையலர் பாப்பாளும் சாப்பிட்டுள்ளார். அவருக்கும் எதுவும் ஆகவில்லை.
தலைமை ஆசிரியை சசிகலா தலித் பெண் சமையலர் பாப்பாள் மீது சாதி மேலாதிக்க எண்ணத்தோடு சத்துணவில் அவரே பல்லியை மறைத்துவைத்துவிட்டு தன் மீது வேண்டுமென்றே பழி போடுகிறார் என்று போலீஸில் புகார் அளித்துள்ளார். தலித் பெண் சமையலர் பாப்பாள் அளித்த புகாரின் பேரில் விசாரனை நடத்திய போலீஸார், தலைமை ஆசிரியை சசிகலாவை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையே இப்படி சாதி ரீதியாக செயல்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.