தமிழ் வழிக்கல்வி மாணவர் சேர்க்கைக்காக அடேங்கப்பா விளம்பரம் செய்யும் அரசு உதவி பெறும் பள்ளி!
தென்காசி : தமிழ் வழிக்கல்வியை பெற்றோருக்கு ஊக்குவிக்கும் வகையில் ஏலக் கம்பெனி போல பரிசுகளை வழங்கி மாணவர் சேர்க்கையை ஊக்குவித்து அனைவர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் தலைமை ஆசிரியர் சரவணன்.
தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் சிந்தாமணி என்ற இடத்தில் இயங்கி வருகிறது ஆனந்தா தொடக்கப்பள்ளி. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலுள்ள இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
தகுதிக்கு மீறி அதிக கட்டணம் கட்டி தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரின் மனப் போக்கை மாற்றி அரசு உதவி பெறும் பள்ளியில் அதிலும் தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் மாணவர்களை சேர்ப்பதை ஊக்குவிப்பதற்காக அடேங்கப்பா பிளானை அறங்கேற்றியுள்ளார் சரவணன்.
|
வித்தியாச விளம்பரம்
எம்.ஏ.எம்.எட் பட்டதாரியான சரவணன் இந்த அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 5 ஆண்டுகளாக உள்ளார். மாணவர் சேர்க்கைக்காக தனியர் பள்ளிகள் தங்களது மாணவர்களின் சாதனைகளை தம்பட்டம் அடித்து பேனர் போடும் காலத்தில் எங்கள் பள்ளியில் சேர்த்தால் சிறப்பு பரிசுகள் என்று அறிவித்து பேனர் வைத்துள்ளார் தலைமை ஆசிரியர் சரவணன்.
தங்க நாணயம் பரிசு
அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா 1 முதல் 5ம் வகுப்பு வரை சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கிராம் தங்க நாணயம் அல்லது மிக்சி, கிரைண்டர், மின்விசிறி இவற்றில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது மட்டுமல்ல வருடத்திற்கு ரூ. 1000 வீதம் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும் உண்டாம்.
பம்பர் பரிசுகள்
ஒரே வீட்டிலுள்ள 2 மாணவர்களைச் சேர்த்தால் அவர்களுக்கு பீரோ வழங்கப்படும் என்றும் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்று பம்பர் லிஸ்ட் நீள்கிறது. இது போன்ற விளம்பரத்தை மேம்போக்காக பார்த்தால் கிண்டல் அடிக்கத் தோன்றினாலும் தமிழ் வழிக் கல்வி பயிற்றுவிக்கும் அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் காட்டும் ஆர்வம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.
தகுதிக்கு மீறிய ஆசை
சுவாரஸ்யமாக பேனர் வைத்து மாணவர் சேர்க்கை நடத்தும் தலைமை ஆசிரியர் சரவணனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது "ஒரு மனிதனுக்கு உணவு, உடைக்கு அடுத்தபடியாகத் தான் கல்வி. ஆனால் ஆங்கில மற்றும் தனியார் பள்ளி மோகம் காரணமாக வசதியை மீறி கடன் வாங்கி பள்ளியில் சேர்த்த அவதிப்படும் பெற்றோரை நான் பார்க்கிறேன்".
மாணவர்களுக்கு ஊக்கம்
"எனவே அவர்களின் எண்ணம் தவறு, அரசு உதவி பெறும் பள்ளியிலும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்பதாலேயே ஆண்டுதோறும் இது மாதிரி பரிசுகளை அறிவித்து மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறேன். இது மட்டுமல்ல காலை நேரத்தில் பசியோடு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காலை உணவு, படிக்கத் தேவையான பொருட்கள் என அனைத்தையும் வாங்கி ஊக்குவித்து வருகிறேன்," என்று தெரிவித்தார்.
இயன்றதைச் செய்வோம்
தான் மட்டுமல்ல தன்னைப் போல பல ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் தங்களால் இயன்ற உதவியை மாணவர்களுக்கு செய்து வருகின்றனர். இருப்பதை வைத்து இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதே உண்மை என்பதால் மாணவர்களுக்கு உதவி செய்து தமிழ் வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகள் மூடப்படாமல் இருக்க பாடுபட்டு வருகிறோம்" என்று கூறுகிறார் சரவணன்.