கவுரவம் பார்க்காமல் தமிழக அரசு கட்டணத்தைக் குறைக்க தினகரன் வலியுறுத்தல்
கவுரவம் பார்க்காமல் தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் என்று டி.டி.வி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர் : உயர்தப்பட்ட அரசுப் பேருந்து கட்டணங்களை கவுரவம் பார்க்காமல் தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக அரசு கடந்த 20ம் தேதி அரசுப் பேருந்து கட்டணங்களை அதிக அளவில் உயர்த்தியது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடந்து வந்தன.
இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்து வருகிறது.
இதுகுறித்து தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன், தமிழக அரசு தன்னிச்சையாக செயல்பட்டு பேருந்து கட்டணங்களை உயர்த்தி உள்ளது. இதனால பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மக்களின் இன்னல்களைக் கருத்தில் கொண்டு, எந்த வித கவுரவமும் பார்க்காமல் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்களை முழுமையாக குறைக்க வேண்டும் என்று தினகரன் கேட்டுக்கொண்டு உள்ளார்.