சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்... ராமதாஸ் கேட்கிறார்!
நெல்லை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் மூலம் சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடு தமிழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. இந்த மாநாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளது என்ற பெயர் விபரம், உற்பத்தி, முதலீடு போன்ற தகவல்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
முதலீட்டாளர்கள் மாநாடு...
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.200 கோடி செலவில் கோலாகலமாக நடந்தது. இதனால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்பது கதை. கடந்த 3-2-14 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய ஜெயலலிதா ரூ.42,400 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் யாரும் முதலீடு செய்யவில்லை. கடந்த பிப்ரவரி 15-ந் தேதி ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அறிவித்தார்கள். எந்த முதலீடும் வரவில்லை.
மக்களை ஏமாற்றும் முயற்சி...
தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் தொழில் தொடங்க கையெழுத்திடவில்லை. இது மக்களை ஏமாற்றும் முயற்சி. மக்கள் நம்பமாட்டார்கள்.
வெள்ளை அறிக்கை வேண்டும்...
தற்போது எந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளது என்ற பெயர் விபரம், உற்பத்தி, முதலீடு போன்ற தகவல்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
ரயில் பெட்டி தொழிற்சாலை...
தென் மாவட்டங்களில் ஜாதி மோதல்களை தடுத்த நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. அங்கு மத்திய அரசு உதவியுடன் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்மாவட்டங்களின் வளர்ச்சி...
வளர்ச்சி என்பது ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி இருக்கவேண்டும். ஆனால் சென்னையை சுற்றி 60 சதவீத தொழிற்சாலைகளும், கோவையில் 15 சதவீத தொழிற்சாலைகளும், மற்ற அனைத்து பகுதிகளிலும் 25 சதவீத தொழில்சாலைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்கள் தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வரவேண்டும்.
மின்வெட்டு...
தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு வந்துள்ளது. காற்றாலை மின்சாரத்தை இவர்கள் கொள்முதல் செய்வது இல்லை. காற்றாலை மின் அதிபர்கள் தெலுங்கானா மாநிலத்துக்கு மின்சாரம் சப்ளை செய்கிறார்கள். அணுமின் நிலையம் கூடாது என்பதே எங்கள் கொள்கை அரசு கூறியபடி சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.
பாமக தலைமையில் கூட்டணி...
அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் இல்லாத கூட்டணி பா.ம.க. தலைமையில் ஏற்படும். எல்லோரும் நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். ஆனால் அந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வோடு சேர்ந்து விடும். கருத்துகணிப்பு சரியானது அல்ல. ஆம் ஆத்மி, மம்தா பானர்ஜி போன்றவர்கள் கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் ஆட்சியை பிடித்தது போல பா.ம.க. ஆட்சியை பிடிக்கும்.
மண்டல மாநாடு...
இதற்காக மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் வருகிற 20-ந் தேதி மாநாடு நடக்கிறது. நெல்லையில் அக்டோபர் மாதம் 11-ந் தேதி நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் சார்பாக மண்டல மாநாடு நடக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.