கூடங்குளத்தில் 3வது 4வது அணு உலை நிறுவுவதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்: திருமாவளவன்
கூடங்குளத்தில் 3வது 4வது அணு உலை நிறுவுவதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை: நெல்லையில் நடைபெற்ற அணு உலைக்கு எதிரான பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது கூடங்குளத்தில் 3வது 4வது அணு உலை நிறுவுவதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கூடங்குளத்தில் அணு உலை பூங்கா அமைக்க கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் பாளைங்கோட்டையில் பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் குமாரசாமி துவங்கி வைத்தார். இந்த பேரணியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலை இயங்காத நிலையில் 3வது 4வது அணு உலை நிறுவுவதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டும். வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
ஓருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், அணு உலைக்கு எதிராக 2வது கட்ட போராட்டத்தை துவங்கி உள்ளோம். இதனால் ஏற்படும் தீமைகள் குறித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.