போராடும் அரசு ஊழியர்களை கைது செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : ராமதாஸ்
அரசு ஊழியர்களைக் கைது செய்வதை விடுத்து பேச்சுவார்த்தை நடத்த அரசு முன் வரவேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக அரசு தொடந்து அரசு ஊழியர்களிடத்தில் வன்முறை போக்கையே கையாண்டு வருகிறது அதைக் கைவிடுத்து அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிப்பது, தொகுப்பூதிய முறையை நீக்குவது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசு போராடும் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதிய ஓய்வூதியத் திட்டம்
அந்த அறிக்கையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை.
நிறைவேற்றப்படாத வாக்குறுதி
இது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்று விட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கூறி வரும் அதிமுக அரசு, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அநத வாக்குறுதியை நிறை வேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
அரசின் நியாயமற்ற செயல்
அதுமட்டுமின்றி, இடை நிலை ஆசிரியர்கள், முது கலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிப்பது, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு தொகுப்பூதியத்தை நீக்கி விட்டு காலமுறை ஊதியம் வழங்குவது 21 மாத ஊதியக் குழு நிலுவைத் தொகை அளிப்பது என்பன உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளும் இதுவரை நிறை வேற்றப்படாதது நியாயமல்ல.
பேச்சுவார்த்தை தேவை
அரசு ஊழியர்கள் அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தும்போது, அது தொடர்பாக அவர்களை அழைத்துப் பேசுவது தான் சரியான அணுகுமுறையாகும். மாறாக போராட்டம் நடத்தும் பணியாளர்களை கைது செய்வது எந்த வகையிலும் பயனளிக்காது. மாறாக போராட்டத்தையும் சிக்கலையும் பெரிதாக்கவே வகை செய்யும். எனவே, அடக்குமுறைகளை கை விட்டு, அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.