நிவாரணத்தில் தாமதம் ஏன்? தேர்தலின் போது அரைமணி நேரத்தில் பணப் பட்டுவாடா செய்தது எப்படி?: வைகோ
சென்னை: இடைத்தேர்தலின் போது ஆளும் கட்சியினர் அரைமணிநேரத்தில் பணப்பட்டுவாடா செய்த நிலையில் வெள்ளநிவாரணத்தை வழங்க மட்டும் தாமதம் செய்வது ஏன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கிய தொகையை வைத்து எந்த நிவாரணப் பணியையும் மேற்கொள்ள முடியாது என்று கூறியுள்ள வைகோ, நிவாரண உதவியாக ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளளூர் மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் ஒவ்வொரு பகுதியாக சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார் உணவளித்தும் வருகிறார்.
15000 பேருக்கு உணவு
தமிழகம் முழுவதும் குறிப்பாக வடமாவட்டங்கள் அனைத்தும் இந்த வரலாறு காணாத மழையாலும், வெள்ளத்தாலும் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடந்த மூன்று நாட்களாக அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுக்கூடங்கள் அமைத்து உணவு தயாரித்து 15000 பேருக்கு வைகோவே நேரில் உணவு வழங்கினார்.
இருண்டு போன வாழ்க்கை
மக்களுக்கு இப்போது தேவை எல்லாம் அங்கே எல்லோரும் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள், சொத்துப் பத்திரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை எல்லாம் இழந்து எதிர்காலமே இருண்டு சூன்யமாகிவிட்டது என்ற கவலையில் சென்னை மாநகரத்தில் லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறுதல்
காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரும்புலிச்சேரி பாலம் சேதமடைந்து, இரும்புலிச்சேரி, அட்டவட்டம், சாமியார்மடம் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு போக்குவரத்து 20 நாட்களாக முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதி மக்களை மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்யின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
நிவாரணப்பணிகளில் வேகம் தேவை
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை உயர்த்த வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டார்.
அரை மணிநேரத்தில் பணப்பட்டுவாடா
சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல்களின் போது ஆளும் கட்சியினர் அரைமணிநேரத்தில் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். ஆனால் நிவாரணம் வழங்குவதில் மட்டும் தாமதம் செய்வது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பினார். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மாநகரமே வங்கக் கடலாக மாறி விட்டது. வீடுகளின் முதல் மாடி அளவுக்கு வெள்ள நீர் புகுந்ததால், இலட்சக்கணக்கான மக்கள் மொட்டை மாடிகளில் சிக்கிக் கொண்டு, உயிர் பிழைக்க வெளியேற வேண்டிய துயரத்தில் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
செயலிழந்த நிர்வாகம்
தமிழக அரசு நிர்வாகம் முற்றிலுமாகச் செயல் இழந்து விட்டது. வட கிழக்குப் பருவமழையின் தீவிரத்தை, வானிலை ஆய்வு மையம் கடந்த இரு மாதங்களாகவே சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்து இருந்தது. நவம்பர் 8 ஆம் தேதி முதல் பெய்து வரும் அடைமழையால் சென்னை முழுவதுமே மழைநீர் வடியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்தது. தமிழக அரசு அப்போதே உரிய திட்டமிடல்களுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டு இருக்க வேண்டும்.
அலட்சியமே அழிவுக்க காரணம்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டு இருந்தபோது, ஏரி உடையக்கூடிய அபாயம் இருப்பதை முன்கூட்டியே கணிக்காமல், அலட்சியமாக இருந்ததன் விளைவுதான் இன்று சென்னை நகரம் இத்தகைய கோரமான பேரழிவைச் சந்தித்தற்குக் காரணம் ஆகும். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடி நீரை பொதுப்பணித்தறை அதிகாரிகள் திறந்து விட்டதால், குறுகலான அடையாறில் நீர் வெளியேற முடியாமல் சென்னையை மூழ்கடித்து விட்டது.
யாருக்கும் அதிகாரம் இல்லை
ஜெயலலிதா ஆட்சியில் முதல்வரைத் தவிர, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் எவருக்குமே எந்த அதிகாரமும் இல்லை. துறை ரீதியாக விரைந்து தேவையான முடிவுகளை எடுப்பதற்கு வழி இல்லாமல், அரசு நிர்வாக இயந்திரம் போயÞ தோட்டத்து உத்தரவுக்காக காத்திருக்கும் அவலை நிலை தொடர்வதால், எந்தவிதத் திட்டமிடலோ, துறை வாரியாக ஒருங்கிணைப்போ அறவே இல்லை. இதன் ஒட்டுமொத்த விளைவாக சென்னை மக்கள் எல்லாவற்றையும் இழந்து நிராதரவாக நிற்கின்றனர்.
நிவாரணம் கிடைக்கவேண்டும்
தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களில் இருந்து தொண்டுள்ளம் கொண்டோர் உதவிப் பொருட்களைச் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் உதவிப் பொருட்கள் சென்று சேர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டிக்கர் ஒட்டுவதால் தாமதம்
ஏரி, குளங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதால்தான் இவ்வளவு பெரிய வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது, நேரு ஸ்டேடியத்தில் குவிந்துள்ள நிவாரணப் பொருட்கள் படம் ஒட்டுவதினால் நிவாரணங்கள் மக்களை சென்றடைய கால தாமதமாகிறது
போர்கால நடவடிக்கை
தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண உதவித் தொகையாக ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். வெள்ள நிவாரணப் பணிகளில் வீண் கௌரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சியினரையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும், தனியார் பள்ளிகள்,கல்லூரிகளின் நிர்வாகத்தினரையும் ஈடுபடுத்த அரசு முன்வரவேண்டும்.
பிரதிநிதிகள் குழு
சாலைகள்,ரயில் பாதைகள் துண்டிக்கப்பட்டு தீவாக மாறியிருக்கும் சென்னையைக் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஜிஎஸ்டி சாலை,கிழக்குக் கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றை ராணுவத்தின் உதவியுடன் உடனடியாக சீரமைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரின் இழப்பீடுகளைக் கணக்கெடுத்து நிவாரணங்களைச் சரியாக வழங்கிட, பணிகளை மேற்பார்வையிட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்திட வேண்டும் எனவும் வைகோ தெரிவித்தார்.