ஜி.எஸ்.டி. மசோதா.. மாநில அரசு இழப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் - திருமாவளவன்
சென்னை: ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றத்தால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருப்பதை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது.
ஆனால் இது மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அமைந்து விடக்கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் போது தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.9270 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிய வருகிறது. இந்த இழப்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவே இந்த இழப்பில் இருந்து தமிழக அரசு தன்னிறைவு பெறும் வரையில் மத்திய அரசு தொடர்ந்து இழப்பீட்டை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுகிறது.
அதே வேளையில் மாநில உரிமைகள் என்னும் பெயரால் பொது மக்கள் மீது விருப்பம் போல் வரிச்சுமைகளை திணிப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசிடம் சுதந்திரம் கோருவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.