மக்களின் கருத்து சுதந்திரத்தை மத்திய மாநில அரசுகள் நசுக்கப்பார்க்கின்றன : ஜி.ராமகிருஷ்ணன்
மக்களின் கருத்து சுதந்திரத்தை மத்திய மாநில அரசுகள் நசுக்கப்பார்க்கின்றன என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேனி : அரசை எதிர்த்தால் மக்கள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். இது அவர்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி என்று மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் கொள்ளை விரோத செயல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனியில் பிரசார இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்,
போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். அரசை எதிர்த்து யார் பேசினாலும், அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி. இதை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவுக்கு பயந்து தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது.
மத்திய அரசு விவசாய விளை பொருட்களுக்கான விற்பனை விலையை உற்பத்தி செலவுடன் 1 மடங்கு கூடுதலாக சேர்த்து நிர்ணயிக்க வேண்டும். நலிந்து வரும் சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.