கோவையை தொடர்ந்து மாமல்லபுரத்திலும் ஆய்வை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து வருகிறார்.
அண்மையில் கோவையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைத்தினார். மேலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பல இடங்களில் அவர் ஆய்வு செய்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மாநில அரசின் சுயாட்சி உரிமையை பறிக்கும் மத்திய அரசின் செயல் இது என கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் ஆளுநரின் ஆய்வுக்கு ஆளும்கட்சி தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் ஆய்வு செய்தால் மாநிலத்துக்கு தேவையான உதவிகள் கிடைக்கும் என்று அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
ஆய்வு செய்தால் தான் அரசை பாராட்ட முடியும் என்று கூலாக கூறினார் ஆளுநர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனது ஆய்வு தொடரும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் பற்றி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் நிலைமை குறித்து ஆளுநர் கேட்டறிந்தார். ஆளுநர் மீண்டும் ஆய்வுப் பணியில் இறங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.