இசைஞானி இளையராஜாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து!
பத்மவிருது பெரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பத்மவிருது பெரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்ம விருதுகளை அறிவித்தது. அதன்படி இந்தியா முழுவதற்கும் மொத்தம் மூன்று பத்மவிபூஷண் விருதுகள், ஒன்பது பத்மபூஷண் விருதுகள், 73 பத்மஸ்ரீ விருதுகளையும் மத்திய அரசு அறிவித்தது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர். இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதும், தொல்லியல் ஆய்வாளர் நாகசாமிக்கு பத்மபூஷண் விருதும், மதுரையைச் சேர்ந்த ராஜகோபால் வாசுதேவன், நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், கோவையைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள், கிண்டி பாம்பு பண்ணையை நிறுவிய ராமுலஸ் விட்டேகர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பத்ம விருது பெறும் தமிழகத்தை சேர்ந்த இளையராஜா உட்பட 6 பேருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் நாட்டு மக்களுக்கு செய்த சேவைக்காக அவர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.