கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு... ஆளுநர் பன்வாரிலால் உரையிலும் இடம்பெற்ற நீண்ட நாள் கோரிக்கை!
தமிழக மீனவர்கள் இலங்ககைக் கடற்படையால் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பது மட்டுமே ஒரே வழி என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக மீனவர்கள் இலங்ககைக் கடற்படையால் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பது மட்டுமே ஒரே வழி என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையில் தாக்குதல் குறைந்துள்ளதாகவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தைத் தொடங்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசின் செயல்பாடுகள் குறித்து, இது வரை தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார். அப்போது அவர், பாக் ஜலசந்தியில் மீனவர்களின் உரிமையை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறைந்துள்ளது.
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்கள் வசம் இருக்கும் படகுகளை விடுவிக்கவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கச்சத்தீவை மீட்க மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர்கள் பிரச்னைக்கான ஒரே வழி என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு விரைவில் அனுமதியளிக்க மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொள்வதாகவும், தமிழகத்தின் 16 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை ஏற்படப்பட்டுள்ளதற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். எனினும் இது மற்ற மாவட்டங்களிலும் வர வேண்டும் என்றார்.
பட்டா மாறுதல் உட்பட இணையதளம் வழியிலான அரசு பணிகள் மக்களுக்கு பயனளிக்கிறது. மக்களின் சிரமங்களை போக்க 5 ஆண்டுகளில் 300 இ-சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றம் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார்.