பொங்கல் தினத்தில் பொங்கட்டும் ஆனந்தம்.. ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் தினத்தில் அனைவரின் மனதிலும், வாழ்க்கையிலும் சந்தோஷம் பொங்கட்டும் என தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலக தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையை அனைவரும் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்தியுள்ளனர்.
தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறுவடை திருவிழாவான பொங்கல் விழா நமக்கு வளத்தை வழங்குகிறது என்று அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் வாழ்த்து
தமிழக முதல்வர் பழனிசாமி தன் கைப்பட எழுதிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்து அடங்கிய அட்டை மூலமாக மக்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த அட்டைகள் எல்.எல்.ஏ, எம்.பி. மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
துணை முதல்வர்
இதேபோன்று துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் முதல்வர் பழனிசாமியுடன் இணைந்து கூட்டாக வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில் அகிலமே பயனுறும் வகையில் தன் உழைப்பையும், அறிவையும், ஆற்றலையும் வழங்கிய தமிழ் இனம் சிறப்பாக பொங்கலை கொண்டாட வேண்டும் எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்டாலின் வாழ்த்து
இல்லம்தோறும் இன்பப்பொங்கல் பொங்கட்டும் என்றும் பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக கொண்டாடுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். பொங்கல் விழா என்பது தமிழர் திருநாள் என்றும் தமிழர் புத்தாண்டு மட்டும் அல்லாது திராவிடர் இனத்தின் பண்பாடு திருவிழா என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜயகாந்த் வாழ்த்து
நெற்றி வியர்வை நிலத்தில் பட பாடுபட்ட அனைவரும் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய நாள் இந்த பொங்கல் திருநாள் என்றும், அனைவரும் குடும்பத்தோடு இந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும் விஜயகாந்த் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக நலன்
வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இருளுக்கு பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு எத்தனை சோதனைகளும், வேதனைகளும் வந்தாலும் அதனை தாங்கிக்கொண்டு தமிழகத்தின் நலன் மற்றும் ஜனநாயகத்தை காக்க இந்த பொங்கல் திருநாளில் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தினகரன் வாழ்த்து
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் பொங்கல் பண்டிகை தமிழர்களின் தனிச்சிறப்பு மட்டுமல்லாது தமிழர்களின் உயர்பண்பையும் பொங்கல் பண்டிகை பறைசாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
ராமதாஸ், திருமாவளவன் வாழ்த்து
தமிழக மக்களுக்கு அனைத்து வகையான தீமைகளிலுருந்தும் விடுதலை கிடைக்க உறுதியேற்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸும், பொங்கலை மண், மக்கள், உழவுத்தொழிலை பாதுகாக்கும் நாளாக கொண்டாடுவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தங்களின் பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளனர்.