தூத்துக்குடி ரத்தம் சிந்திக் கொண்டிருந்த நேரத்தில் ஊட்டியைச் சுற்றிப் பார்த்து ரசித்த ஆளுநர்!
தூத்துக்குடி கலவரத்தின்போது ஆளுநர் ஊட்டி பூங்காவை சுற்றி பார்த்து கொண்டிருந்தார்.
சென்னை: தமிழகமே நேற்று சோகக் கடலில் மூழ்கி கிடக்க மாநில ஆளுநரோ ஊட்டி மலர்க்கண்காட்சியின் அழகை ரசித்து மகிழ்ந்திருக்கிறார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21ம் தேதி அவர் குடும்பத்தினருடன் சென்றார். அடுத்த மாதம் 2ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு விழாக்களில் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார். ஊட்டியில் துவங்கிய மலர்க்கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநரும் கலந்துகொண்டார்.
அப்போது தூத்துக்குடி மாவட்டத்தின் துப்பாக்கிச்சூடு துயர சம்பவம் நடைபெற்று, தமிழகமே கொதித்த கொண்டிருந்த உச்சக்கட்ட நேரம் அது. நேரம் பிற்பகல் 3 இருக்கும். அப்போது, ஆளுநர் தனது குடும்பத்தினருடன், ரோஜா பூங்கா, படகு இல்லம், மற்றும் தாவரவியல் பூங்காவை சுற்றி பார்த்து கொண்டிருந்தார்.
தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் ஆளுநரின் இந்த செயல் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட உள்ளூர் மக்களையும் கடும் அதிருப்திக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. அதுமட்டுமல்லாமல் தோட்டக்கலைதுறை சார்பாக நடைபெற்ற விழாவில் பங்கேற்று பரிசுகள் பலவற்றையும் தந்துள்ளார். தாவரவியல் பூங்காவில் பிற்பகல் 3 மணியிலிருந்து 5 மணி வரை என சுமார் 2 மணி நேரம் ஆளுநர் இருந்துள்ளார்.
இதன்பிறகு பூங்காவை விட்டு ஆளுநர் புறப்படும்போது அவரிடம் பத்திரிகையாளர்கள், தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் இறந்து உள்ளார்களே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வியையும் எழுப்பினர். ஆனால், அதற்கு ஆளுநரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. குறைந்தபட்சம் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்காமல் அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.
அது, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தின் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய கதக் கலை நிகழ்ச்சி ஆகும். இதற்காக விழா இடத்திற்கு சென்ற ஆளுநர் காரில் வந்தார். அவர் வருவதற்கு முன்னதாகவே அவரது குடும்பத்தினர் அந்த விழாவினில் பங்கேற்க இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால் நுழைவு வாயில்வரை வந்த ஆளுநர் காரை விட்டு இறங்கவில்லை. அங்கும் பத்திரிகையாளர்கள் வந்து கேள்விகளை கேட்டால் என்ன செய்வது என்று யோசித்து, நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று கூறி ராஜ்பவனுக்கே சென்றுவிட்டார். இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மேடையில் அறிவித்தார்.
துப்பாக்கி சூட்டின்போது, ஆளுநர் பூங்காவை சுற்றி பார்த்த காட்சியினையும், பலியானவர்கள் குறித்து எந்தவித கருத்தும் கூறாமல் சென்றதையும், ஆளுநர் வருகையையொட்டி போக்குவரத்து திருப்பிவிடப்பட்டதால், பயணிகள் 7 கி.மீ. நடந்து சென்று அவதிக்குள்ளானதையும் நினைத்து நீலகிரி மக்கள் இன்னமும் பொருமிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.