அண்ணா பல்கலை. துணை வேந்தர் நியமனம்.. ஆர்.எம். லோதா தலைமையில் புதிய குழு.. ஆளுநர் அதிரடி உத்தரவு
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய புதிய குழுவை நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தரை தேர்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களிலும் நீண்ட காலமாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதனால், உயர்கல்வித் துறை செயலர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுதான் அந்தப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பணிகளை தற்காலிகமாக கவனித்து வந்தது.
இதற்கிடையில், இந்த 3 பல்கலைக்கழகங்களுக்கும் புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுக்களும் பெயர் பட்டியலை ஆளுநரிடம் வழங்கின. இதனைத் தொடர்ந்து நேர்காணல் நடத்தப்பட்டது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். ஆனால் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு மட்டும் துணை வேந்தர் தேர்வு செய்யப்பட வில்லை.
இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தரை தேர்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமித்துள்ளார். இக்குழு புதிய துணைவேந்தருக்கு 3 பேரை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு ஆளுநருக்கு அனுப்பிய பட்டியலில், மோகன், கருணாமூர்த்தி, எபினேசர் ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இப்பட்டியலை கவர்னர் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.