அறுவடை திருவிழாவில் வித்தியாச எண்ணங்களை கைவிட வேண்டும்.... ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து
அறுவடை திருவிழா எனப்படும் ஓணம் திருவிழாவில் வித்தியாச எண்ணங்களை கைவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓணம் பண்டிகையில் வித்தியாச எண்ணங்களை கைவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள
வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகை என்பது செழிப்பான அறுவடையையும், பக்தி, வீரம், அன்பு மற்றும்
பெருந்தன்மை மனது மிக்க மகாபலி அரசரையும் நினைவுகூரத்தக்க விழா ஆகும். இந்த அறுவடை திருவிழா நம்மிடையே நிலவும் வேற்றுமைகளை, வித்தியாச எண்ணங்களை விட்டுவிட்டு, ஒருங்கிணைந்த பண்போடு செயல்பட வேண்டும் என்பதை நம்மிடையே நினைவூட்டுகிறது.
இந்த ஓணம் பண்டிகை நமது சகோதரத்துவ உணர்வு, தேசிய ஒருமைப்பாடு, கடின
உழைப்பு ஆகியவற்றை பலப்படுத்துவதோடு, அதன்மூலம் நம் நாட்டை
எல்லாவிதத்திலும் நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் விதமாக அமையட்டும். எனவே இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பரந்து கிடக்கும் மலையாள
சகோதர-சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த ஓணம் பண்டிகை வாழ்த்துகளை
தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கேரளா மாநில மக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை
எழுச்சியுடன் கொண்டாடும், தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள்
அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தலைவர் கருணாநிதி
சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்
கொள்கிறேன். சாதி, மத வேறுபாடின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் இந்த ஓணம் திருநாள் சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்று ஓணம் பண்டிகையை அம்மாநில மக்கள்
அழைத்து, உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் இந்த விழாவிற்கு
எண்ணற்ற பெருமைகள் உண்டு. ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் முதல் நாளன்று, கேரளாவில் பூக்கள் பூத்துக் குலுங்கும் "அத்தப்பூ"
பூக்கோலம் போட்டு வீரம், தீரம், ஈரம் மிகுந்த "மகாபலி" சக்ரவர்த்தியை கேரள
மக்கள் மனமுவந்து மகிழ்ச்சி பொங்க வரவேற்கும் நாளாகத் துவங்கி, அடுத்தடுத்த
நாட்களில் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்ளுதல், உணவு பரிமாறிக்
கொள்ளுதல், இளைஞர்கள் மத்தியில் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரியப்
படகுப்போட்டி நடத்துதல் என தொடர்ந்து நடைபெற்று, பத்தாவது நாளில் திருவோணம் என்ற எழுச்சிமிகு கொண்டாடட்டத்துடன் ஓணம் திருவிழா நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் உணர்வுகளை மதிக்கும் பொருட்டு, ஓணம்
பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக நாகர்கோவில், கோவை, நீலகிரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு விடுமுறை அளித்து 2006-ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தவர் தலைவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அன்புக்கும், கொடைக்கும் அடையாளமான ஓணம் திருநாளை கொண்டாடும், திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் கேரள மக்கள், எல்லா வளமும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த ஓணம் திருநாளன்று வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
ஓணம் குறித்து வைகோ வாழ்த்து :
கேரள மக்களின் உன்னதமான பண்டிகைத் திருநாள்தான் ஓணம் பண்டிகை ஆகும்
மகாபலி சக்கரவர்த்தி கொடை, அறம் வீரம் இவற்றால் புகழ் பெற்று, கர்வம் ஏற்பட்டதால் அதை அடக்குவதற்காகத் திருமால் வாமன அவதாரம் எடுத்து,
தன் காலால் அளப்பதற்கு மூன்று அடி நிலம் வேண்டும் என்று கேட்டான்.
எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்று சக்கரவர்த்தி கூறினான்.
அப்போது, அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார். மகாபலி சக்கரவர்த்தியிடம்
இது திருமாலின் வேலை இந்த சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.
ஆனால், கூறியது கூறியதுதான் என்றார் மகாபலி, திருமால் விஸ்வரூபம் எடுத்து
ஓரடியால் மண்ணையும் மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது? என்று கேட்டபோது, தன் தலை மீது வைக்கச் சொன்னான் மகாபலி.
மகாபலி சக்கரவர்த்தி அழிய நேரிட்டாலும் அவருக்கு, சொர்க்கத்திற்கு நிகராகப் பாதாள உலகத்தைப் படைத்து அங்கு அனுப்பினார் திருமால்.அப்போது, ஆண்டுககு ஒருமுறை தான் வந்து தன்னுடைய கேரளத்து மக்களைப் பார்க்க வேண்டும என்று மாபலி சக்கரவர்த்தி கேட்ட வரம் நல்கப்பட்டது.
அதன்படி கேரளத்திற்கு வருகின்ற அவரை, கேரள மக்கள் பத்து நாட்கள் பல்வேறு வகையிலே பூக்களைத் தூவியும் கோலங்கள் இட்டும் வரவேற்கின்றார்கள் என்பது,
இந்த ஓணம் பண்டிகையின் நம்பிக்கை ஆகும் என்று வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 6 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு வைகோ வாழ்த்துச் சொல்லும் போது, உங்களுக்கும் வாழ்த்து. உங்கள் மூலமாகக் கேரள மக்களுக்கும் வாழ்த்து என்றார் வைகோ. அதற்கு முதல்வர் நன்றி கூறினார்.
அதன்பின்னர் முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டி, முன்னாள் உள்துறை அமைச்சரும காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா அவர்களுக்கும்,
வைகோ அலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் மார்க்சிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியை வைகோ அனுப்பினார்.