பரபரப்பான அரசியல் சூழலில் மும்பை புறப்பட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நேரத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பை புறப்பட்டார்.
சென்னை: தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டார்.
நேற்று தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதனையடுத்து சட்டசபையில் வரலாறு காணாத அளவிற்கு திமுகவினரும் ஸ்டாலினும் தாக்கப்பட்டனர். இதனையடுத்து தமிழகத்தில் நேற்று அசாதாரண சூழல் நிலவியது. இதனால் நேற்று மும்பை செல்ல வேண்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது பயணத்தை ரத்து செய்தார்.
இந்நிலையில், இன்று காலை முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து அவர் ஆளுநரை சந்தித்து சட்டசபையில் நடைபெற்ற விவரங்கள் குறித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து திமுக எம்பிக்களான திருச்சி சிவா, ஆர். எஸ். பாரதி, டி.கே. எஸ். இளங்கோவன் ஆகியோர் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு சட்ட விரோதமானது என்றும் சட்டசபையில் நடைபெற்ற வன்முறை குறித்தும் ஆளுநரிடம் மு.க. ஸ்டாலின் சார்பாக நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களுடம் ஆளுநரை சந்தித்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவதால் காலையிலேயே அரசியல் தலைவர்களை சந்தித்து பேசிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றார்.