7 தமிழர் விடுதலை.. ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவுதமன்
7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுதமன் கூறியுள்ளார்.
Recommended Video
கும்பகோணம்: ராஜீவ் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி க்கு எதிராக நடைபெற்ற 365-வது நாள் போராட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன் கலந்து கொண்டார். அப்போது கவுதமன் உள்ளிட்ட பலர் மீது பந்தநல்லூர் போலீசார் கடந்த மே மாதம் 19-ம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்றத்தில் சரண்
இவ்வழக்கு தொடர்பாக இன்று கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் கவுதமன் சரணடைந்தார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து எப்போது சம்மன் வருகிறதோ அப்போது மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையுடன் கவுதமன் உடனடியாக விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதும் செய்தியாளர்களை சந்தித்து கவுதமன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
அனுமதி கிடையாது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்த நிறுவனத்திற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல், மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கதிராமங்லம் உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மீத்தேன் உள்ளிட்ட எந்த பெட்ரோலிய பொருட்களை எடுக்க எந்த மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
கைது செய்ய வேண்டும்
நாங்கள் சட்டத்தை மதித்து நடக்கிறோம். நீதிமன்றத்தில் ஆஜராகினோம். ஆனால் எச். ராஜா. எஸ்.வி. சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காவல்துறையினரின் உதவியோடு உலா வருகின்றனர். இவர்கள் கைது செய்யப்பட வேண்டும். கருணாசுக்கு ஒரு நீதி, எஸ்.வி. சேகர், மற்றும் எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா?
7 பே ரவிடுதலை
எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் உடனடியாக கைது செய்ய வேண்டும். எச்.ராஜா மற்றும் கருணாஸ் விவகாரத்தால் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை மறக்கடிக்கப்பட்டுள்ளது . தமிழக ஆளுநர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இயக்குனர் கவுதமன் கூறினார்.