ஆளுநரின் ஆய்வை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை : ஜி.கே.வாசன்
ஆளுநரின் இந்த ஆய்வை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூர் : மக்களின் எதிர்ப்பை மீறி ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநரை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்து உள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டது பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆளுநரின் இந்த செயல் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவரிடம் ஆளுநரின் ஆய்வு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களின் எதிர்ப்பை மீறி ஆய்வு மேற்கொள்ளும் ஆளுநரின் செயலை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இது மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் என்றும், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சமயத்தில் ஆய்வு நடத்துவது சரியான முறை அல்ல என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாநில அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை. இந்தப் புயலால் நெல், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட பயிர்கள் ஏக்கர் கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையும் போதுமானதாக இல்லை.
எனவே, ஓகி புயலால் பாதித்த வாழைக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும், நெற்பயிருக்கு ரூ.30 ஆயிரமும், கிராம்புக்கு ரூ.1 லட்சமும், ரப்பருக்கு ரூ.15 ஆயிரமுமாக நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஜி.கே வாசன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும் காணாமல் போன மீனவர்கள் மீட்புப்பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதுவரை மீட்கப்படாத 450 மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நம்பிக்கை தரும் அரசாக செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்கப்போய் ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்த ஆய்வாளர் பெரியபாண்டியனின் மரணத்திற்கு காரணமானவர்களை விரைவில் கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் காவல்துறைக்கு வேண்டுகொள் விடுத்து உள்ளார்.