ஆட்சி கலைப்புக்காக உள்துறை செயலாளரை ஆளுநர் வித்யாசாகர் சந்தித்ததாக தீயாய் பரவிய புரளி!
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியுடன் ஆலோசனை நடத்தவில்லை என்று ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆளுநரை சந்தித்ததாக சொல்வதில் உண்மையில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பரபரப்பு செய்தி வெளியானது. ஆனால் இது வழக்கமான நிகழ்வு தான் என்று தமிழக காவல்இயக்குனர் ராஜேந்திரன் மறுத்துவிட்டார்.
ஆனால் திடீர் உத்தரவு செய்தி தீயாகப் பரவியதால் ஆட்சிக் கலைப்பா, முக்கிய புள்ளிகளில் யாராவது மரணமா என்ற பீதி தமிழகம் முழுவதும் கிளம்பியது. இதே போன்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆளுநரை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆட்சி கலைப்புக்காகத்தான் இப்படி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அந்த வதந்தி செய்திகள் கூறின.
ஆனால் இதனை மறுத்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. உள்துறை செயலாளரை ஆளுநர் சந்தித்ததாக சொல்வதில் உண்மையில்லை என்றும் ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதித்துள்ளனர்.