ரயில் மறியல் போராட்டத்தால் ஆளுநர் சென்னை திரும்ப முடியாமல் தவிப்பு
கன்னியாகுமரியில் மீனவர்கள் காலை முதல் ரயில் மறியலில் ஈடுபட்டு வருவதால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். இதனால் அவர் ரயிலுக்கு பதிலாக காரில் பயணிக்க திட்டமிட்டுள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மீனவர்களின் உறவினர்கள் காலை முதல் ரயில் மறியல் போராட்டத்தால் ரயிலில் சென்னை திரும்ப முடியாமல் தவித்த ஆளுநர் தற்போது கார் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
ஓகி புயல் தாக்கியதால் பாதிப்புக்குள்ளான மீனவர்கள் 7 நாள்களாகியும் கரை திரும்பவில்லை.தமிழக அரசு அதிகாரிகளும் மீனவர்களை மீட்க தீவிரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
மீனவர்களை உடனடியாக மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறையில் காலை முதல் மீனவர்களின் உறவினர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை கைவிடுமாறு நெல்லை சரக டிஐஜி கபில், பத்மாபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜகோபால் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதனால் அவ்வழியாக வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
வெள்ள சேதத்தை பார்வையிட குமரி மாவட்டத்துக்கு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை குளச்சல் துறைமுகத்தில் மீனவர்கள் முற்றுகையிட்டதால் அவர் குமரிக்கு திரும்பினார்.
இந்நிலையில் குமரியிலிருந்து சென்னை திரும்ப ரயில் மார்க்கமாக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் ரயில் மறியல் போராட்டத்தால் குமரி எக்ஸ்பிரஸ் இணைப்பு ரயில் வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ஆளுநர் சென்னை திரும்ப முடியாமல் தவித்தார்.
இதையடுத்து குமரியில் உள்ள அரசினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங், எஸ்.பி. துரை ஆகியோருடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினர். அப்போது புயல் சேதம், நிவாரணம், மீனவர்களை மீட்பதில் சுணக்கம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து ஆளுநர் தனது பயண திட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். கார் மூலம் மதுரை சென்றுவிட்டு அங்கிருந்து இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்லவுள்ளார்.