காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்.. முல்லை பெரியார் அணை உயரத்தை அதிகரிக்க வேண்டும்: ஆளுநர் உரை
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் காவிரி மற்றும் முல்லை பெரியார் பிரச்சனை குறித்து ஆளுநர் உரையாற்றி இருக்கிறார்.
சென்னை: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் காவிரி மற்றும் முல்லை பெரியார் பிரச்சனை குறித்து ஆளுநர் உரையாற்றி இருக்கிறார். உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.
இந்த வருடத்தில் நடக்கும் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது தொடங்கி இருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் தனது உரையில் ''காவிரி மேலாண்மை வாரியத்தையும், முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும். அதேபோல் முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினையில், சட்ட உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு உறுதியாக உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் அனைத்து பிரச்சனைகளிலும் நிலைத்தக்க இலக்குகளை தமிழகம் எய்திவிடும்'' என்றார்.
மேலும் ''கறவை பசு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2016 -17ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.2,478 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது'' என்று விவசாயிகள் குறித்தும் பேசினார்.
அதேபோல் ''ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு உதவியுடன் ரூ.200 கோடி ஒதுக்கப்படும். சென்னை மெட்ரோ ரயிலின் மீதமுள்ள வழித்தடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும்.'' என்றார்.
மேலும் "இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் வளர்ப்பு பயிற்சி மையங்களை நடத்தி வருகிறோம்
உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழகம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது'' என்றும் குறிப்பிட்டார்.