கவர்னர் வித்யாசாகர ராவ், தலைவர்கள் தீபாவளி வாழ்த்து
தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவ் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பதையொட்டி தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவ் மற்றும் அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
வித்யாசாகர ராவ்
தீப ஒளி அறியாமை என்னும் இருளை போக்கி வெற்றியையும் வளர்ச்சியையும் கொண்டு வரட்டும் என்று கவர்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி திருநாள் நேர்மறை சிந்தனையுடன் பணியாற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர ஆண்டவனை வேண்டிக் கொள்வதாகவும் கவர்னர் வித்யாசாகர ராவ் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
இருளை அகற்றி ஒளி ஏற்றிய தீபாவளி திருநாளை இன்றும் நம் நாட்டு மக்கள் கண்கூடாக கண்டு மகிழ்கிறார்கள். நம் பிரதமர் நரேந்திர மோடி இன்று நம் நாட்டினை ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார். எல்லாத்துறைகளிலும் முன்னேற்றத்தை நாம் காண துவங்கியுள்ளோம். நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் நம் திறமைகளை வளர்த்து நாட்டின் வளர்ச்சியில் பணிபுரிந்து நாட்டை ஒளி நிறைந்ததாக மாற்றுவது நம் தலையாய கடமையாக அமையட்டும்.
தீபாவளி நாளில் வரும் மாசுகளை உடனே அகற்றி தூய்மையானதாக நம் வீட்டையும் நாட்டையும் உருவாக்குவோம். நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ இத்தீபாவளி திருநாளில் ஆதிபராசக்தியை பிரார்த்திக்கிறேன்.
மனித இனத்திற்கு எதிராக கொடுமை செய்த நரகாசுரனை வதம் செய்ததையே மகிழ்ச்சியாக கொண்டாடிய தீபாவளி, இன்றைக்கு மக்கள் பண்டிகையாக விளங்கி வருகிறது.
இன்று இந்திய நாட்டில் இருள் அகன்று ஒளி பிறக்கட்டும். தீபாவளி பண்டிகை அன்று புத்தாடை அணிந்து, இனிப்பு பலகாரங்கள் உண்டு, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற தமிழக மக்கள் வாழ்வில் வளமும், நலமும் பெறட்டும் என நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை
தமிழகமும் மாநில உயிரோட்டத்துடன் தேசிய நீரோட்டமும் கலந்து ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சி ஒளிர இந்த தீபத் திருநாள் வழிவகை செய்யட்டும் என இறைவனை வழிபடுகின்றோம். உடல் நலமற்ற தலைவர்கள் உடல்நலம் பெறவும், சுயநலமற்றவர்கள் பொதுநலம் உடையவர்களாக மாறவும் தமிழர்கள் அனைவரும் பல நன்மைகள் பெற்று நலமாக வாழவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்நாள் முதல், தமிழகத்தின் தீராத பிரச்சனைகள் தீர வேண்டும். மழை பொழிய வேண்டும். வேளாண்மை செழிக்க வேண்டும். தொழில் வளர வேண்டும். துயரங்கள் அகல வேண்டும். நலிந்தோர் நலனுக்கான நல்ல பல புதிய திட்டங்கள் வரவேண்டும். மொத்தத்தில் விவசாயிகள் வாழ்வில் ஒளிதீபம் ஏற்ற வேண்டும், மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிய வேண்டும்.
தமிழகம் தழைக்க வேண்டும். தரணி மக்கள், தமிழ் மக்களின் செயல் திறனைப் போற்ற வேண்டும். தீப ஒளி பரவட்டும். தீராத பிரச்சனைகள் தீரட்டும். தேன் தமிழ்போல் தமிழ் மக்கள் வாழ்வு இனிக்கட்டும், செழிக்கட்டும் தமிழ் மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்
இந்த தீபாவளி திருநாளில் அனைவருடைய துன்பங்களையும் துயரங்களையும் விலக்கி எல்லோருடைய வாழ்விலும் தீபஒளி தொடர்ந்து கிடைத்திட வேண்டும். தேசத்தில் சமதர்மம் பூத்துக்குலுங்கிட வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் அனைவரும் ஒன்றாய் இருந்து நன்றாய் உழைத்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
கார்த்தி சிதம்பரம்
தீபஒளி திருநாளில் நம்முடைய இல்லங்களில் ஏற்றிடும் தீபத்தின் ஒளியானது மக்களிடையே தேசிய உணர்வையும், சகோதரத்துவத்தையும் போற்றிடும் ஒளியாக அனைவரது உள்ளத்திலும் பரவி, என்றென்றும் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திட வேண்டும் என்று அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.