திங்களன்று சென்னை வரும் ஆளுநர் வித்யாசகர் ராவ்... மீண்டும் சூடு பிடிக்கும் தமிழக அரசியல்
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கட்கிழமையன்று சென்னை வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கட்கிழமையன்று சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் அவர் மிக முக்கிய முடிவு ஒன்றை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வருக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்த நாள் முதல் தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 18 எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரி மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் 18 எம்எல்ஏக்களும் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும், மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது.
வித்யாசாகர் ராவ்
அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. அதேவேளையில் தகுதிநீக்கத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னையில் இருந்து நாக்பூர் சென்றார்.
குடியரசுத்தலைவர் வருகை
மகாராஷ்டிர மாநிலத்துக்கு முதல்முறையாக வந்த குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரவேற்றார். அம்பேத்கர் நினைவிடத்தில் மரியாதை, விபாசனா மெடிடேஷன் சென்ட்டர் துவக்க விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் குடியரசுத் தலைவரோடு கலந்துகொண்டார் ஆளுநர் வித்யாசகர் ராவ்.
சட்டசபையை முடக்க திட்டம்
அப்போது தமிழகத்தின் அரசியல் நிலவரம் பற்றி விரிவாக விவாதித்தாராம். அரசியல் ஸ்திரமற்ற சூழலைப் பற்றி குடியரசுத் தலைவரிடம் ஆளுநர் விளக்கினாராம். இப்போதய சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபையை முடக்குவதுதான் சரியாக இருக்கும் என்பது போல கூறினாராம் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
ஆளை விடுங்க சாமி
ஆளுநர் என்கிற முறையில் எந்த மதிப்பும், மரியாதையும் எதிர்கட்சியினர் கட்சியினர் தருவதில்லை. தினகரனும் ஆளுநரை எச்சரிக்கும் தொனியிலேயே பேசினார். இது ஆளுநருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். தன்னை
தமிழக பொறுப்பு ஆளுநர் பதவியில் இருந்து விடுவித்தாலும் நல்லது என்று குடியரசுத்தலைவரிடம் பேசியுள்ளாராம் ஆளுநர்.
திங்களன்று ஆளுநர் வருகை
மீண்டும் வரும் 25 ஆம் தேதி சென்னை வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓரு முடிவோடுதான் வருகிறாராம். ஆளுநர் வருகைக்குப் பின்னர் திங்கட்கிழமை முதல் பிளாஷ் நியூஸ் அதிக அளவு வெளியாகும் அளவிற்கு தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சூடுபிடிக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறி வருகின்றன.