பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கைப் பிடித்த 20 போலீஸாருக்கு பதவி உயர்வு.. உத்தரவிட்டது அரசு!
மொத்தம் 20 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது...
ஆந்திரா மாநிலம், புத்தூரில் கடந்த அக்டோபர் 5-ந் தேதி பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக போலீசார் வீரத்துடன் போராடி கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் எஸ்.லட்சுமணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜி.சங்கர், டி.செந்தில்குமார் உள்பட 20 பேருக்கு ஒரு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
இந்த அதிகாரிகளுக்கு தமிழகம் முழுவதும் புதிய பணியிடங்கள் உருவாக்கவேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று 20 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, அந்த பணியிடங்களில் பதவி உயர்வு பெற்ற 20 பேரும் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஓய்வுப்பெற்று விட்டாலோ அல்லது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டாலோ, இந்த புதிய பணியிடங்கள் அனைத்தும் காலாவதியாகிவிடும்.
இந்த அரசாணையின் படி பதவி உயர்வு பெற்று, புதிய பணியிடங்களில் நியமிக்கப்படுபவர்களின் விவரம்:
திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு டி.செந்தில்குமார், திருச்சி (நிர்வாகப் பிரிவு) துணை கமிஷனராகவும், சிறப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜி.சங்கர், சிறப்பு பிரிவு சூப்பிரண்டாகவும், மதுரை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு உதவி கமிஷனர் எஸ்.மாரிராஜன், மதுரை சிறப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாகவும், மதுரை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு உதவி கமிஷனர் எம்.கார்த்திகேயன், சென்னை சிறப்பு பிரிவு சூப்பிரண்டாகவும் நியமிக்கப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ஆர்.விஜயராகவன், திருச்சி சிறப்பு பிரிவு துணை சூப்பிரண்டா கவும், சேலம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் எஸ்.ஆனந்தகுமார், கோவை சிறப்பு பிரிவு துணை சூப்பிரண்டாகவும், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் எஸ்.லட்சுமணன், பி.ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு பிரிவு துணை சூப்பிரண்டுகளாகவும், திருத்தணி இன்ஸ்பெக்டர் டி.வீமராஜ், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் எஸ்.வெற்றிவேல், ஆர்.மணிகண்டன் ஆகியோர் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்களாகவும், சி.பி.சி.ஐ.டி. ஏட்டு ஆனந்தன், சிறப்பு பிரிவு ஏட்டு ஜெ.எட்வர்டு பிரைட், ஏட்டு பிரபு ஆகியோர் சிறப்பு புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி போலீஸ் நிலைய ஏட்டு எம்.இளங்கோ, திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும், மதுரை சி.பி.சி.ஐ.டி. புலனாய்வு பிரிவு முதல் நிலை காவலர் பி.சிவநேசன், மதுரை சி.பி.சி.ஐ.டி. ஏட்டாகவும், சிறப்பு பிரிவு காவலர் கே.ராஜசேகரன், முதல்நிலை காவலராகவும், திருவள்ளூர் ஆயுதப்படை காவலர் கே.கலைவாணன், ஆர்.ராஜ்குமார் ஆகியோர் முதல்நிலை காவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.