திண்டிவனத்தில் பதற்றம்: அம்பேத்கர் சிலை அவமதிப்பு கண்டித்து அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு
அரசு பேருந்துகளின் மீது கற்களை வீசி சேதம் விளைவித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video
திண்டிவனம்: திண்டிவனத்தில், அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து மர்மநபர்கள் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதுடன், பேருந்துகளின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.
திண்டிவனம் சிறுவாடி - முறுக்கேறி சாலையில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு அவமதித்துவிட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டு இருந்ததை பொதுமக்கள் இன்று காலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலை முன்பு ஒன்றுதிரண்டு, சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனகூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட துவங்கின. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட துவங்கியது.
திண்டிவனம் மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த 7 அரசு பேருந்துகளின் மீது மர்மநபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அத்துடன் அந்த பேருந்துகளின் கண்ணாடிகளையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனங்களின் மீது கல்வீசித்தாக்குதல் நடத்தினர்.
அப்பகுதிகளில் பதற்றம் மேலும் நீடித்துவிடக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உடனடியாக ஈடுபட்டனர். அம்பேத்கர் சில அவமதித்தவர்கள் யார் என்பது குறித்தும், அரசு பேருந்துகள் மீது கற்களை வீசி சேதம் விளைவித்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.