தூத்துக்குடியில் புரட்சி.. இடிந்தகரையிலும் மக்கள் கொந்தளிப்பு.. அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டம்
Recommended Video
நெல்லை: ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரி நெல்லையிலும் போராட்டம் வெடித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் திரண்டு அரசுப்பேருந்தினை சிறைபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், அதனை மூட வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில், மோதல் வெடித்தது. தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, வாகனங்கள் தீவைத்து எரிப்பு, கல்வீச்சு போன்றவற்றுடன் துப்பாக்க சூடும் அரங்கேறியது.
இதில், துப்பாக்கிசூட்டில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஆலைக்கு எதிராகவும் துப்பாக்கி சூட்டின் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நெல்லையில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் திரண்டுள்ளனர்.
மேலும் அவ்வழியாக சென்ற அரசு பேருந்தினை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளதுடன், நெல்லை மாவட்டத்திலும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.