திருவான்மியூரில் அரசு பேருந்தில் தீ: அலறியடித்து ஓடிய பயணிகள்
சென்னை: திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த அரசு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.
சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏராளமான பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. அப்போது திருவான்மியூரில் இருந்து தாம்பரம் செல்லும் அரசு பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் திடீர் என தீப்பிடித்தது. இதை பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.
இது பற்றி தீயணைப்புத் துறையினருக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறை வீரர்கள் 3 வாகனங்களில் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதுமான எரிந்துவிட்டது.
இந்த சம்பவம் பற்றி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மின்கசிவு காரணமாக பேருந்து தீப்பிடித்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேருந்து தீப்பிடித்த சம்பவத்தால் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.