கண்டக்டர்களே.. அரசுப் பள்ளி மாணவர்களை இப்படி நடத்துவது நியாயமா?
கண்டக்டரும், டிரைவரும் பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
Recommended Video
திருவள்ளூர்: அங்கங்கே ஊழல் பண்ணிட்டு, கொலை பண்ணிட்டு, சின்ன குழந்தைகளை பலாத்காரம் செய்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இதெல்லாம் தொடர் கதையாகவே உள்ளது. மற்றொரு பக்கம் அப்பாவிகள் அடிபடுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
ஒரு குற்றமும் இழைக்காத ஒரு பள்ளி மாணவனை அடித்து உதைக்கும் காட்சி அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மாணவனை அடிப்பது அரசு ஊழியர்கள். அதாவது, பஸ் கண்டக்டரும், டிரைவரும்!!
பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் குணசேகர். எப்பவுமே பள்ளிக்குபொன்னேரியில் இருந்து 557 சி என்ற அரசு பஸ்ஸில்தான் சென்று வருவார். அப்படித்தான் வழக்கம்போல் பஸ்ஸில் ஏறினார். அப்போது கண்டக்டர், பஸ் பாஸை காண்பிக்குமாறு கேட்டார். அதற்கு குணசேகரன், பஸ் பாஸ் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
மாணவன் மீது தாக்குதல்
இதையடுத்து குணசேகரனிடம் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டார் கண்டக்டர். டிரைவரும் வண்டியை ஓட்டுவதைவிட்டு விட்டு, பஸ்ஸில் உட்கார்ந்து இருப்போரையும் கண்டுக்காமல், கண்டக்டரின் சப்போர்ட்டுக்கு வந்துவிட்டார். ஒருகட்டத்தில் இரண்டு பேரும் சேர்ந்து குணசேகரனை பஸ்ஸில் இருந்து இறக்கி விட்டுவிட்டனர். அதோடு விட்டுவிட்டிருந்தால் கூட பரவாயில்லையே... மாணவரை சரமாரியாக அடித்து வெளுக்க ஆரம்பித்துவிட்டனர்.
வீடியோ வைரல்
சரி, இத்துடனாவது விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. மாணவன் தங்களை தாக்கியதாக பொன்னேரி ஸ்டேஷனில் புகார் கூறினர். போலீஸாரும் மாணவன் மீது வழக்கு பதிவு செய்து சிறார் சிறையில் அடைத்து விட்டனர். பிறகு உடனடியாக குணசேகரனை ஜாமீனில் விடுவித்தனர். தகவலறிந்த குணசேகரனின் பெற்றோர் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். இப்போது படுகாயமடைந்த குணசேகரனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர். மிருகத்தனமாக குணசேகரனை அடித்து உதைக்கும் காட்சியை பஸ்ஸில் இருந்த பயணியே செல்போனில் பிடித்து அதை தற்போது வெளியிட்டுள்ளார்.
பஸ் பாஸ் இல்லை
இந்த விவகாரத்தை பொறுத்தவரை 2 தவறுகள் நடந்துள்ளது. ஒன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கப்படவே இல்லையாம். அதனால் யூனிபார்ம் போட்டு மாணவர்கள் பஸ்ஸில் ஏறினாலும் நடுவழியிலேயே இறக்கி விடப்படுகிறார்களாம். பாதிவழியில் இறக்கிவிட்டுவிட்டால், அந்த மாணவர்கள் எப்படி சரியான நேரத்திற்கு ஸ்கூலுக்கு போக முடியும்?
இப்படியா நடத்துவது?
இரண்டாவது தவறு, ஒரு அரசு கண்டக்டரும், டிரைவரும் இதெல்லாம் ஒரு பிரச்சனை, மாபெரும் குற்றம் என்று 17 வயது பையனை அடித்து உதைப்பதா? வழக்கமாக வரும் மாணவர்களை டிரைவர், கண்டக்டர்களுக்கு தெரியாதா? அப்படியே தெரியாவிட்டாலும் யூனிபார்ம் அணிந்து வரும் அதுவும் அரசு பள்ளி யூனிபார்ம் அணிந்த மாணவனை இப்படித்தான் கண்மூடித்தனமாக தாக்குவதா? நடுவழியில் இறக்கி விட்டிருந்தாலும் பரவாயில்லையே, புகார், சிறை இதெல்லாம் படிக்கும் பிள்ளையை எவ்வளவு பாதிக்கும் என தெரிய வேண்டாமா? அரசு ஊழியர்களே, அரசு பள்ளி மாணவர்களை இப்படி நடத்துவது நியாயமா?