மாரடைப்பில் மரணிக்கும் போதும் பயணிகள் உயிர் காத்த அரசு பஸ் டிரைவர்
செங்குன்றம் அருகே மாநகரப் பேருந்தை ஓட்டிச் சென்ற சுந்தர்ராஜ் என்பவர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: செங்குன்றம் அருகே மாநகரப் பேருந்தை ஓட்டிச் சென்ற சுந்தர்ராஜ் என்பவர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணம் நெருங்கிய தருணத்திலும் டிரைவர் சுந்தரராஜன் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் செய்த போது ஒரு டிரைவர் எழுதிய கடிதம் வைரலானது.
ஒருநாள் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக் கொண்டு வண்டியை கட்டுபாட்டில் வைத்து ஓரம் கட்டினேன். உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடு தான் என் பணியை செய்தேன் என்று எழுதியிருந்தார். அது கதையல்ல நிஜம்தான் என்று கூறும் அளவிற்கு இன்றைக்கு பல டிரைவர் மாரடைப்பில் மரணமடைகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேத்துப்பட்டு அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற டிரைவர் அன்புராஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி விட்டு நெஞ்சுவலிப்பதாக கூறினர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பாக மரணமடைந்தார். போளூரில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்த இயக்கிய அன்புராஜின் மரணம் பயணிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
பஸ் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அவரை வேறு ஒரு பஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். அரசு பேருந்தை ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கினார். ஆந்திர மாநிலம் தடாவிற்கு பேருந்து வந்தபோது ஓட்டுனர் சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்துக் கொண்டிருந்த சிவக்குமார், சாதுர்யமாக பேருந்தை ஓட்டி சாலையோரம் நிறுத்தி விட்டு உயிரை விட்டார். அவரது சாமர்த்தியமான முயற்சியினால் 80 பயணிகள் உயிர் தப்பினர்.
பணிச்சுமை காரணமாக அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் பல டிரைவர்கள் மாரடைப்பினால் மரணமடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.