மதுரையில் மாயமான அரசு பஸ்... சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு
மதுரை: மதுரையில் அரசு பேருந்தை மர்மநபர் ஒருவர் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மாயமான பேருந்து சிவகங்கை அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து மதுரை வந்த அரசு பேருந்து (டி.என் 67 என் 0680 ) நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தடைந்தது.
காலை 5.30 மணிக்கு மீண்டும் செங்கோட்டை செல்லவிருந்த பேருந்தை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி சென்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அதிகாலையில் வந்து பார்த்த போது அந்த பேருந்து, நிறுத்தப்பட்ட இடத்தில் இல்லை.
இதனையடுத்து பேருந்து நிலையம் முழுவதும் தேடியதில் பேருந்து மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மனநலம் பாதிக்கப்பட்ட யாரேனும் பேருந்தை திருடிச் சென்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மாயமான பேருந்தை தேடும் பணி மதுரை மாவட்டம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டது. இதனிடையே மதுரையில் மாயமான பேருந்து சிவங்கை அருகே கண்டுபிடிக்கப்பட்டது.