அமைச்சர் விஜயபாஸ்கர் சார், இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டீங்களா?
சென்னை: அரசு பஸ்கள் மீது குறைகள், குற்றச்சாட்டுகளுக்குப் பஞ்சமே இல்லை. அரசு பஸ்னா அப்படித்தானே என்று அலட்சியம் நிலவுகிறது. ஆனால் சில விஷயங்களில் அவற்றை அப்படியே விட்டு விட முடிவதில்லை. காரணம், ஏழைகள் மற்றும் கீழ்த் தட்ட நடுத்தர வர்க்கத்தினரை அதிகம் பாதிப்பதால்.
இதோ இன்னும் ஒரு அரசு பஸ் பஞ்சாயத்து. நமது வாசகர் கலைச்செல்வன் நமக்கு புகைப்படத்துடன் அனுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு டோல்கேட்டிலிருந்து அரசு பஸ்களில் பலரும் பல்வேறு ஊர்களுக்கு ஏறுவது சகஜமானது. அந்த வகையில் செங்கல்பட்டு டோல்கேட்டிலிருந்து மேல்மருவத்தூருக்கு அரசு பஸ்களில் கட்டணம் ரூ. 25. ஆனால் பெரும்பாலான அரசு பஸ்களில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
மாறாக பெருங்களத்தூர் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதாவது ரூ. 39 கட்டணமே கண்டக்டர்கள் வசூலிக்கிறார்களாம். இதனால் தேவையில்லாமல் ஒரு நாளைக்கு கூடுதலாக 14 ரூபாய் செலவிட நேரிடுகிறது. அரசு பஸ்களையே நம்பியுள்ள மக்களுக்கு ஒரு நாளைக்கு தேவையில்லாமல் 14 ரூபாய் கூடுதலா செலவிட்டால் இப்போதைய பொருளாதார நிலையில் எப்படி சமாளிக்க முடியும்.
இந்தப் படத்தில் உள்ள பஸ்ஸின் கண்டக்டர் கறாராக 39 ரூபாய் டிக்கெட்டே எடுக்க வேண்டும் என்று கூறி விடாப்பிடியாக அதையே கொடுத்தும் பயணிக்க வைத்துள்ளார் (சனிக்கிழமை இது நடந்துள்ளது)
போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் இதைக் கவனித்து நடவடிக்கை எடுத்தால் அரசு பஸ் பயணிகளின் பாராட்டையும், அன்பையும் பெற முடியும்.