அரசு பேருந்துகளின் பரிதாப நிலை- திகிலில் பயணிகள்
சங்கரன்கோவில்: முதல்வரால் இயக்கி வைக்கப்பட்ட அரசு பேருந்துகள் அடிக்கடி டீசல் இல்லாமல் காட்டு பகுதியில் நிறுத்தப்படுவதால் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 333 புதிய பஸ்களும், 81 சரி செய்யப்பட்ட பழைய பஸ்களும் ஆக மொத்தம் 414 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 30ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதில் நெல்லை கோட்டம் சங்கரன்கோவில் பணிமனைக்காக 4 பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இதில் வழித்தடம் எண் 8ல் சங்கரன்கோவிலிருந்து சுரண்டைக்கு இயங்கும் வண்ணம் முதல்வரால் இயக்கி வைக்கப்பட்டது. இந்த புதிய பஸ் சுரண்டையில் பயணிகளை ஏற்றி கொண்டு சேர்ந்தமரம், வீரசிகாமணி, நடுவங்குறிச்சி வழியாக மீண்டும் சங்கரன்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தது.
வல்லராமபுரம் கிராமம் சென்று விட்டு சங்கரன்கோவில் வரும் வழியில் காட்டு பகுதியில் டீசல் இல்லாமல் பஸ் திடீரென நின்றது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் பயணிகள் தவித்தனர். பின்னர் அனைவரும் ஒன்றாக இறங்கி சிறிது தூரம் நடந்து பிரதான சாலைக்கு வந்து மற்றொரு அரசு பஸ்சில் ஏறி சங்கரன்கோவில் சென்றனர்.
சங்கரன்கோவில் அரசு பஸ்களுக்கு உள்ளூரில் டீசல் நிரப்பாமல் 15 கிமீ தூரத்தில் உள்ள பங்கில் டீசல் நிரம்புகின்றனர். இதனால் டீசல் காலியாகி பஸ் பாதி வழியில் நின்றதாக கூறப்படுகிறது. முதல்வரால் இயக்கி வைக்கப்பட்ட பஸ் நிலையே இப்படி என்றால் மற்ற பஸ்களின் நிலையை என்னவென்று சொல்வது என்பது பயணிகளின் குமுறலாகும்.