விபத்தில் சிக்கிய பேருந்து... ரத்தம் சொட்ட பேருந்து ஓட்டிய அரசு டிரைவர்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தின் ஓட்டுனர், பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்தம் சொட்ட சொட்ட பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள தச்சயான்புலியூர் அருகே தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது சரக்கு ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சரக்கு லாரியில் இருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்த கனரக இரும்புக் கம்பிகள் பேருந்து மீது மோதின.
கம்பிகள் வேகமாக மோதியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து, பயணிகள் மீது சிதறி விழுந்துள்ளது. இதனால் பதட்டம் அடைந்த பயணிகள் கூச்சலிட, விபத்து நடந்த இடத்திலிருந்து பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்ற டிரைவர், மக்கள் நடமாட்டம் உள்ள பாதுகாப்பான இடத்தில் சாலையோரம் நிறுத்தியுள்ளார்.
கம்பிகள் மோதியதால் முன்புற கண்ணாடி சேதமடைந்து ஓட்டுனரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டுவதை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடல் முழுவதும் ரத்தம் கசிந்து படுகாயம் அடைந்த நிலையிலும் அந்த ஓட்டுனர் பயணிகளை பத்திரமான இடத்தில் கொண்டு சேர்க்க முயன்றதைக் கண்டு அனைவரும் பாராட்டி, உயிரை காத்ததற்கு நன்றி கூறியுள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பலத்த காயமடைந்த ஓட்டுனரை மருத்துவமனைக்கு பயணிகள் அனுப்பி வைத்தனர். பயணிகளின் பாதுகாப்புக் கருதி சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனருக்கு அனைவரும் பாரட்டுக்களைத் தெரிவித்தனர்.