பஸ் கூட்ட நெரிசலில் பெண்கள் சிக்காமல் போகவே மானிய ஸ்கூட்டர்... சொல்வது செல்லூர் ராஜூ
பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் பாதிக்காமல் செல்லவே மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படுவதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: நிதி நெருக்கடி இருந்தாலும் பெண்களுக்கு மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்படாமல் இருக்கவே ஸ்கூட்டர் கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸ் டிக்கெட் கட்டணம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ரேசன் கடைகளில் உளுந்தம்பருப்பு அல்லது துவரம்பருப்பு ஏதாவது ஒரு பருப்பு மட்டுமே தரமுடியும் என்றார். இரண்டு பருப்புகளுமே ரேசன் கடைகளில் தரமுடியாது என்றும் கூறினார் செல்லூர் ராஜூ. நாட்டிலேயே அதிக அளவில் பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படுவதாகவும் கூறினார்.
கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டமான மானிய விலை இருசக்கர வாகனம் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினார். இதன் மூலம் பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிக்க முடியும் என்றும் கூறினார். மானிய விலை இரு சக்கர வாகனம் சரி, பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கிறதே அது மானிய விலையில் தருவார்களா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
சென்னையில் ஒரு நாள் பாஸ் கட்டணம் ரூ.50 லிருந்து 70 ஆக உயரலாம். மாத பாஸ் கட்டணம் ரூ.1000 லிருந்து 1400 ஆக உயரலாம். என்ற அவர் பணவீக்கம் உயர்ந்துள்ளதால் ரூ.1 பிச்சை போட்டால் பிச்சைக்காரர்கள் கூட வாங்குவதில்லை என்று சில தினங்களுக்கு முன்பு கூறிய செல்லூர் ராஜூவை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.