பிரியாணியில் பீஸைத் தேடிய காலம் போய்... சாம்பாரில் ‘பருப்பைத்' தேடும் காலம் வந்து விட்டது!
சென்னை: வெங்காயம் அழ வைத்த காலம் போய், தற்போது பருப்பின் நேரம். பருப்பின் விலையைக் கேட்டால் சாம்பார் கூட கசக்கத் தான் செய்கிறது. அந்தளவிற்கு விண்ணை முட்டும் அளவிற்கு பருப்புகளின் விலை ஏறிக்கிடக்கிறது.
இந்நிலையில், வாட்ஸ் அப்பில் ஒரு பதிவு உலா வந்து கொண்டிருக்கிறது. அதில், ‘பிரியாணியில் பீஸைத் தேடிய காலம் போய்... சாம்பாரில் ‘பருப்பைத்' தேடும் காலம் வந்து விட்டது! இது தான் நாம் கண்ட மாற்றம், முன்னேற்றம்' என கூறப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், அது தான் தற்போது மக்களின் உண்மையான மனநிலை என்பது அப்பட்டமான உண்மை.
தவிர்க்க முடியாத பருப்பு...
பருப்பு என்பது நம் நாட்டு உணவுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சாதம், இட்லிக்கு சாம்பாராக வைப்பதில் இருந்து, சப்பாத்திக்கு தால்-ஆக செய்யப்படுவது வரை பருப்புகளின் பங்கு இன்றியமையாதது.
மழையால் குறைந்த உற்பத்தி...
ஆனால், போதிய அளவு பருவமழை பெய்யாதது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களினால் நாட்டில் 2014-15ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 20 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விண்ணைத் தொடும் விலை...
கடந்த வாரத்தில் ரூ.185-ஆகவும், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.85-ஆகவும் இருந்த துவரம் பருப்பானது தற்போது சில்லறை விலையில் கிலோவுக்கு ரூ. 200ஐத் தாண்டி விற்கப்படுகிறது. இதேபோல், உளுந்தின் விலையும், சில்லறை விலையில் கிலோவுக்கு ரூ.170-ஆக விற்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இதன் விலையானது ரூ.98-ஆக இருந்தது.
சாம்பாருக்கு தனி காசு...
சந்தையில் பருப்பு வகைகளின் விலை உயர்வால், பொதுமக்கள் பெரிதும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். உணவகங்களிலும் இட்லிக்கு சாம்பார் ப்ரீ என்ற நிலை மாறி, அதற்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உள்ளது.
இறக்குமதி...
எனவே, பருப்பு வகைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்தல், பருப்பு வகைகளைப் பதுக்குவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
5 ஆயிரம் டன் துவரம் பருப்பு...
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து ஏற்கனவே 5 ஆயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,000 டன் துவரம் பருப்பையும், 1,000 டன் உளுந்தையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அலைமோதும் மக்கள்...
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புகளை குறைந்த விலையில் அரசு விற்பனை அங்காடிகளில் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றை பஞ்சகாலங்களில் உணவுக்கு அடித்துக் கொள்வது போல், மக்கள் சென்று வாங்கி வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் டெல்லியில் இவ்வாறு 20 டன் துவரம் பருப்பு விற்பனையாகி இருப்பதே இதற்கு சாட்சி.
சாம்பார் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா..?
‘சாம்பார் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா' எனப் பாட்டுப்பாடும் அளவிற்கு நம்மில் பலர் சாம்பார் ரசிகர்கள். சாம்பார் மட்டுமின்றி அடை, பருப்பு வடை, பருப்பு பாயாசம் என நமது விருந்தில் பருப்புகளின் பங்கு ரொம்பவே அதிகம்.
பாடாய் படுத்தும் பருப்பு...
ஆண்டில் சில குறிப்பிட்ட மாதங்களில் அசைவம் சாப்பிடாதவர்கள் கூட உண்டு. ஆனால், சாம்பார் அப்படியல்ல. ஆண்டு முழுவதும் பருப்பின் தேவை இருந்து கொண்டே இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் இப்படித் தான் வெங்காய விலை அதிகரித்து மக்களை அழ வைத்தது. இப்போது அந்தப் பட்டியலில் பருப்பும் சேர்ந்து நம்மை பாடாய் படுத்துகிறது. இதனாலேயே பல குடும்பங்கள் காரக்குழம்பிற்கு மாறி வருகின்றன.
புரதச்சத்து...
புரதச் சத்து மிகுந்த இந்த பருப்புகளை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம் என்பதாலேயே இதன் தேவை அதிகமாக உள்ளது. ஆனால், இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், பருப்புகளைப் பதுக்கி விலையை ஏற்றி வருகின்றனர்.
மத்திய அரசின் அஜாக்கிரதை...
பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் சூழலில் இவ்வாறு பருப்பு விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருவது மக்கள் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தி அளவு குறையும் என்று தெரிந்த பிறகும் மத்திய அரசு இறக்குமதியில் போதிய கவனம் செலுத்தாதே இந்த அதிரடி விலையேற்றத்திற்கு முக்கியக் காரணம்.
3 மாதம் ஆகும்...
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய், தற்போது இறக்குமதியை துரிதப்படுத்தியுள்ளது மத்திய அரசு. ஆனால், பதுக்கலை கட்டுப்படுத்தினால் மட்டுமே தற்போதுள்ள விலையேற்றத்தை குறைக்க முடியும். அவ்வாறு செய்தாலும் இந்த விலையேற்றம் குறைய மூன்று மாத காலம் ஆகும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.