போக்குவரத்து ஊழியர் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினைதான் காரணம்: அமைச்சர் விஜய பாஸ்கர்
போக்குவரத்து ஊழியர்கள் மரணத்திற்கு போக்குவரத்து கழக பிரச்சனை காரணமில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து தற்கொலை செய்துக்கொண்டும், மனஉளைச்சலால் மாரடைப்பில் மரணமடைந்து வரும் நிலையில் இதற்கு அரசு காரணமல்ல என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. அபுபக்கர், கடையநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கணேசன், போக்குவரத்து கழக வேலை நிறுத்தம் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஓட்டுநர் கணேசன் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 27ம் தேதியே விடுப்பில் சென்றதாகவும், ஆனால் இந்த மாதம் 4-ஆம் தேதிதான் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியதாகவும் தெரிவித்தார். கணேசன் மற்றும் அவரது மனைவி இடையேயான குடும்ப பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் உள்ளதாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே கணேசன் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், மனஉளைச்சலில் மாரடைப்பில் மரணமடைந்ததாகவும் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், இதற்கும் அரசுக்கு சம்பந்தமில்லை என்றும், பின்னணி விவரம் தெரியாமல் அரசின் மீது குற்றச்சாட்டு வைக்ககூடாது என்று கூறியுள்ளார்.