செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.. அமைச்சர் விஜயபாஸ்கர்!
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற பல கோரிக்கைகளை வலியிறுத்தி இரண்டாவது நாளாக இன்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவர் தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 10,000 செவிலியர்களுக்கு இதுவரை பணி நிரந்தர ஆணை வழங்கப்படவில்லை.
இதுவரை அவர்களுக்கு தொகுப்பு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகள் ஆகியும்கூட தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாததால் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்நிலையில் சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
அரசியல் கட்சிகளுக்கு கண்டனம்
செவிலியர்கள் பிரச்சனையில் உண்மையை உணராமல் அரசியல் கட்சிகள் கருத்து கூறுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். செவிலியர்கள் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் அவரசக்கோலத்தில் கருத்து தெரிவிப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.
இந்த மாதம் பணி நியமனம்
நீதிமன்ற வழக்குகளால் செவிலியர்களின் பணி நியமனம் தாமதமானதாகவும் அவர் கூறினார். இந்த மாதம் 800 முதல் 1000 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
காலியிடங்களை பொறுத்து நிரந்தரம்
மேலும் 2 ஆண்டுகளுக்கு செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்பது வழிமுறை என்றும் அவர் கூறினார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு காலியிடங்களை பொறுத்து அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தனியார் கல்லூரி செவிலியர்களும்
தமிழகத்தில் மட்டும் தான் செவிலியர்கள் அரசு ஊழியர்களாக நியமிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் கல்லூரியில் படித்தவர்களுக்கும் பணிநியமன ஆணை தரப்படுகிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.