இந்த சுறுசுறுப்பையும், வேகத்தையும் வெள்ளப் பாதிப்பின்போது காட்டியிருக்கலாமேய்யா?
சென்னை: தமிழக அரசு இயந்திரம் சென்னை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின்போது மகா கேவலமாக பணியாற்றியது, செயல்பட்டது என்பதை இன்னும் மக்கள் மறக்கவில்லை. ஆனால் அதிமுக பொதுக் குழு, செயற்குழுக் கூட்டத்திற்காக அரசு இயந்திரம் முழுமையாக முடுக்கி விடப்பட்டு பணிகள் புயல் வேகத்தில் நடந்திருப்பதை மக்களின் நெஞ்சை எரிய வைப்பதாக உள்ளது.
சென்னையில் வெள்ளம் வந்து நகரையே புரட்டிப் போட்டபோது உதவிக்கு ஓடிவரவில்லை இந்த அரசும், ஆட்சியாளர்களும் அதிமுகவினர். ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது தெருத் தெருவாக ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டிய அதிமுகவினர் வெள்ள பாதிப்பின்போது எங்கே போய்த் தொலைந்தார்கள் என்பது கூடத் தெரியவில்லை.
முழுக்க முழுக்க மக்களே தங்களுக்குள் உதவிக் கொண்டனர். வெளியூர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்த மனிதாபிமான உதவிகள்தான் சென்னை மக்களை மீட்டெடுக்க உதவியது.
அதிமுக நிகழ்ச்சிக்காக மின்னல் வேகம்
இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்திற்காக அரசு இயந்திரத்தை புயல் வேகத்தில் செயல்பட வைத்துள்ளது இந்த அரசு.
புது ரோடு
கூட்டம் நடைபெறவுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவன வளாகத்துக்குள் புது ரோடு போட்டுள்ளனர். வெளியிலும் புது ரோடு பளிச்சிடுகிறது. சாலைகளையும் அகலப்படுத்தியுள்ளனர்.
புது மின்சார கேபிள்கள்
மின்சார வசதிக்காக புதிதாக மின்சார கேபிள்களைக் கொண்டு வந்து பதித்து கனெக்ஷ்ன் கொடுத்துள்ளனர். மரக் கிளைகளையெல்லாம் வெட்டித் தள்ளியுள்ளனர். ஒரு குப்பையைக் கூட அப்பகுதியில் பார்க்க முடியவில்லை.
ஒன்றரை மணி நேர கூத்துக்காக
இத்தனைக்கும் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் மொத்தமே ஒன்றரை மணி நேரம்தான் நடக்கப் போவதாக கூறுகிறார்கள். அதற்கே இந்த அக்கப் போரை கூட்டியுள்ளது அதிமுக அரசு.
சொல்வதற்கு ஒன்றும் இல்லை...!