மேயர்கள் அரசு வாகனத்தை எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? .. கண்காணிக்கிறது அரசு!
நெல்லை: தமிழகம் முழுவதும் மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் அரசு வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துகிறார்களா என்பதை ரகசியமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள், கமிஷனர்கள், பிடிஓக்களுக்கு அரசு வாகனங்கள் வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் அரசு பணிகளை பார்வையிடுவதற்கும், வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்கும், கிராம சபை கூட்டம் நடத்த செல்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆயினும் பெரும்பாலான மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் தங்கள் சொந்த வேலைகளுக்காக இந்த வாகனங்களை பயன்படுத்துவதாக அரசுக்கு தெரிய வந்தது. சில நகராட்சித் தலைவர்கள் தங்களை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், சுற்றுலா செல்லவும் அரசு வாகனங்களை பயன்படு்த்தியுள்ளனர்.
இதையடுத்து அரசு வாகனங்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படு்த்தும் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள், கமிஷனர்களை கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட டிரைவரகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியும், அம்பை, விகேபுரம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய 7 நகராட்சிகளும், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, வள்ளியூர், ஆலங்குளம் உள்பட 19 பேரூராட்சிகளும் உள்ளன.
இதில் ஒரு சில நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள கார்கள் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுவதாக அரசுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
அப்படி முறைகேடாக பயன்படுத்துவது தெரிய வந்தால் அந்த வாகனத்தின் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த வாகனத்தை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.