ஆசிரியர்கள் பெயர் இன்ஷியலை தமிழில் எழுத உத்தரவு - கல்வி துறை அதிரடி
நாகர்கோவில்: ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் பெயரின் இன்ஷியலை தமிழில் எழுத வேண்டும் என தமிழக கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் தங்கள் பெயரில் தலைப்பு எழுத்தை (இன்ஷியல்) தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்ற அரசின் உத்தரவை தொடர்ந்து அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அனைவருக்கும் தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஓரு சில மாவட்டங்களில் பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்கள் பெயரின் தலைப்பு எழுத்துகளை தமிழில் எழுதவில்லை என்றும், ஆங்கிலத்தில் எழுதுகின்றனர் என்றும், இத்தகைய செயல்பாடுகள் அரசு ஆணையை மீறியது என்று புகார்கள் எழுந்துள்ளன.
இதனை தொடர்ந்து தமிழக தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசாணைப்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்கள் பெயரின் தலைப்பு எழுத்துகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இந்த அரசாணைப்படி தங்கள் பெயரின் தலைப்பு எழுத்துகளை தமிழில் மட்டுமே எழுத அறிவுரை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளபபடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.