உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே பதவி உயர்வு... ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்
உடலை ஆரோக்கியமாக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: காவல்துறை உயர் அதிகாரிகள் தங்கள் உடலை திடகாத்திரமாக வைத்திருந்தால் மட்டும் பதவி உயர்வு வழங்கலாம் என்ற உத்தேச திட்டத்தை மத்திய அரசு எடுத்துள்ளது.
போலீஸ் அதிகாரிகளும், போலீஸாரும் பணியில் சேரும் போது அங்கு அளிக்கப்படும் பயிற்சியின் மூலம் தங்கள் உடலை நல்ல விதத்தில் பேணி பாதுகாக்கின்றனர். அவர்கள் பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் கடந்த பிறகு உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.
எனவே போலீஸார் தங்கள் உடலை திடமாக வைத்துக் கொள்வதற்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுக்க உள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் உடலை திடமாக வைத்துக் கொள்வதற்காக புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
அது என்னவென்றால், ஐபிஎஸ் அதிகாரிகள் இனி தங்கள் உடலை திடமாக வைத்துக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இந்த திட்டம் ஏற்கனவே துணை ராணுவப் படையில் நடைமுறையில் உள்ளது. இங்கு உடலை மிகவும் உறுதியாக வைத்து 'ஷேப்-1' என்ற சான்றிதழ் பெறுபவர்களே பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் ஆவர்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் உடல் தகுதி தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், புதிதாக சேருபவர்களுக்கு பயிற்சியின்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.