இனி பள்ளிச் சிறார்களை துன்புறுத்தினால் ரூ. 50,000, கல்லூரியில் ராகிங் செய்தால் ரூ. 10,000 ஃபைன்!
சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை சித்திரவதைப்படுத்துவது மற்றும் ராகிங் ஆகிய கொடுமைகளை தடுக்கும் வகையில், புதிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்யக் கூடாது, மீறினால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப் படுவார்கள் என்பது நிர்வாகங்களின் உத்தரவு.
ஆனால், நிர்வாகங்களுக்கு தெரியாமல் ராகிங் பல இடங்களில் நடக்கத் தான் செய்கிறது. அத்தகைய ராகிங்குகள் சீனியர், ஜூனியர் மாணவர்களிடையே நட்புறவை உண்டாக்க வழி வகுக்க வேண்டும். ஆனால், எல்லை மீறப் படும் பல ராகிங் சம்பவங்கள் விபரீதத்திற்கு விதை போட்டு விடுகின்றன.
சமீபகாலமாக ராகிங் கொடுமைக்கு ஆளாகும் மாணவர்கள் சிலர் தற்கொலை முடிவால் தங்களது வாழ்க்கையையே முடித்துக் கொள்கின்றனர். சென்னை தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த யோகலட்சுமி என்ற மாணவி, சக மாணவியின் ராகிங் கொடுமையால் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது போல் ராகிங்கிற்கு பலியானவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
எனவே, ராகிங்கைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ராகிங் கொடுமை...
கடந்த 2009 - 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் கலந்து கொண்ட 6700 கல்லூரி மாணவர்களில் 99 சதவீதம் பேர் ராகிங்கால் கஷ்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சட்ட திருத்தம்...
தற்போதுள்ள சட்ட திட்டங்களின்படி, ராக்கிங்கில் ஈடுபடுவோருக்கு குறைந்த அளவிலான தண்டனைக்கே வழி உள்ளது. இதனை கூடுதலாக்கும் வகையில், புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சிறை தண்டனை...
இதுதொடர்பாக மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சகம் செய்துள்ள பரிந்துரையின்படி, ராகிங் செய்வோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதிக்கவும் ஆலோசனை தரப்பட்டுள்ளது.
டிஸ்மிஸ்...
ராகிங்கை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் கல்லூரி ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மசோதா தாக்கல்...
வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
பரிந்துரைகள்...
அதேபோல பள்ளிச் சிறார்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய நடைமுறைகளையும் மகளிர் மற்றும் சிறார் நலத்துறை பரிந்துரைத்துள்ளது. இதற்காக 2014 சிறார் நீதி சட்டமசோதாவில் இந்தப் பரிந்துரைகளை அது சேர்த்துள்ளது.
3 ஆண்டு சிறை... ரூ 50000 அபராதம்...
அதன்படி, பள்ளிக் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதைத் தொடர்ந்து செய்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், டிஸ்மிஸ் நடவடிக்கையும பாயும். கடும் காயத்தை ஏற்படுத்துவோருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும்.