அதிமுக பொதுக்குழுவுக்காக ஒட்டுமொத்தமாக களமிறக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை
சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவுக்காக கட்சி நிர்வாகிகள் பார்த்த வேலையை விட அரசு இயந்திரம்தான் முழு வீச்சில் 'களப்பணியாற்றி' கடமையை 'செவ்வனே' செய்திருக்கிறது...
ஆளும் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சென்னை நகருக்குள் திருவான்மியூரில் இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த செயற்குழு, பொதுக்குழுக்கு அதிமுகவினரை விட அதிகம் வேலை பார்த்தது என்னவோ அரசு செய்தித் துறைதான். ஒட்டுமொத்த செய்தித் துறை டீமும் களமிறக்கப்பட்டது.
செய்தித் துறை அதிகாரிகளான சுப்பிரமணியன், கலைநேசன், செல்வராஜ், சிவ சரவணன், தானப்பா, தங்கையன் ஆகியோர் தலைமையில் ராமகிருஷ்ணன், ராகுல், பிரபு, மோகன், ரமேஷ், கார்த்தி, என பெரிய பட்டாளமே 'கருமமே கண்ணா'க பணியாற்றியது.
அதிமுக மேலிடம் கொடுத்த லிஸ்ட் படிதான் செய்தியாளர்கள் பொதுக்குழுவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்படி அதிமுக பொதுக்குழுவுக்கு போன பத்திரிகையாளர்களுக்கும் கூட "எஸ்.பி.சி.ஐ.டி" போலீஸ் பாஸ் வழங்கியதுதான் உச்சம்!
"எஸ்.பி.சி.ஐ.டி" போலீஸ் பாஸ் கொடுத்த விவகாரம் புதிய பஞ்சாயத்தாக வெடிக்கப் போகிறது!