சென்னையில் ஆதித்தனார் சிலை திடீர் மாயம்- சுவடே தெரியாமல் அகற்றப்பட்டதால் பரபரப்பு!
சென்னை: சென்னை எழும்பூரின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் சிலை இரவோடு இரவாக சென்னை மாநகராட்சியால் அகற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தைப் போல அப்பகுதியின் பிரதான அடையாளம் சி.பா. ஆதித்தனார் சிலை. இந்த சிலையை எம்ஜிஆர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் திறந்து வைத்தார்.
இச்சிலை திறக்கப்பட்டது முதலே தினத்தந்தி நிர்வாகம் சிலை பராமரிப்பு பணிகளை இடைவிடாமல் செய்து வந்தது. நாள்தோறும் சிலையை தூய்மைப்படுத்தி மாலை அணிவித்து வந்தது தினத்தந்தி நிர்வாகம்.
இந்நிலையில்தான் திடீரென ஆதித்தனார் சிலை இருந்த சுவடே தெரியாமல் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளோ, சிலையை அகற்றி ஆதித்தனார் குடும்பத்தினரிடம்தான் கொடுத்திருக்கிறோம்.
சிலை இருந்த பகுதியில் சிக்னல்கள், மின்விளக்கு அமைக்க வேண்டியதுள்ளது என கூறுகின்றனர். ஏற்கனவே அங்கு மின்விளக்குகளும் சிக்னல்களும் இருந்த இடம்தான்.. அதை மாற்றினாலே போதுமே... இதற்காக ஒட்டுமொத்தமாக சிலையையே எந்த சுவடுமே இல்லாமல் அகற்றியிருப்பதுதான் ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.