தமிழகத்தில் மின் தடையே இல்லை... அரசின் பதிலை ஏற்று வழக்கு முடித்து வைப்பு
மதுரை : தமிழகத்தில் மின் தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. இதனை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
மதுரையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் சென்னையில் மட்டுமே 24 மணி நேர மின்சார சேவை உள்ளது என்றும், சென்னையை தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளில் அதிக நேரம் மின் வெட்டு உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் தொழில் வளர்ச்சி, விவசாயம் மற்றும் கல்வி உள்ளிட்டவைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், எனவே, சென்னையைப் போல தமிழகத்தின் இதர பகுதிகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தற்போது தமிழகத்தில் மின் பற்றாகுறை நிலைமை சீரடைந்துள்ளது எனவும், தமிழகத்தில் மின் தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.