"நம்ம முதல்வர் யாரு?.. ஓபிஎஸ்".. தூசி மோகனை தூக்கி வாரிப் போட வைத்த மாணவிகள்!
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தமிழக முதல்வர் யார் என்பது தெரியாமல், ஓ.பி.எஸ் என்று பதிலளித்ததால் அதிமுக எம்.எல்.ஏ தூசி மோகன் அதிர்ச்சி அடைந்தார். இவர் எடப்பாடி கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கழனி கிராமத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு தூசி மோகன் திடீர் சோதனையை நடத்தினார். அப்போது ஆசிரியர்கள், சமையல் அலுவலர்கள் யாரும் சரியான நேரத்திற்குப் பணிக்கு வருவதில்லை என்று அவரிடம் புகார் கூறப்பட்டது.
இதைக் கேட்டுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் பிளஸ்டூ மாணவிகளை சந்தித்த அவர் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டனர். தூசி மோகன் கேட்ட மிக மிக சாதாரண கேள்விகளுக்குக் கூட (ஜனாதிபதி யார், பிரதமர் யார் போன்ற கேள்விகள்) மாணவிகளால் சரியான பதிலைத் தர முடியவில்லை.
சரி முதல்வர் யார் என்று கேட்போம் என்று நினைத்து, நமது முதல்வர் யார் என்று கேட்டார் தூசி. அதைக் கேட்டு ஒரு மாணவி வேகமாக எழுந்து ஓ.பன்னீர் செல்வம் என்று கூற தூசி மோகனுக்கு தூக்கி வாரிப் போட்டு விட்டது.
இதனால் ஷாக்காகிப் போன தூசி மோகன், தலைமை ஆசிரியர் ராஜசேகரனை கடிந்து கொண்டார். பொது அறிவு கூட இல்லாமல் மாணவிகள் என்ன கல்வி கற்கிறார்கள் என்று கோபப்பட்ட அவர் மாணவிகளுக்கு பொது அறிவு குறித்து நடத்துங்கள் என்றும் அறிவுரை கூறினார்.