ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விடுமுறை
மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மதுரை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் மேலும் மேலும் வலுவடைந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் போராட்டமாக உள்ளது. சாலை மறியல், ரயில் மறியல் என போர்க்களமாக தமிழகம் மாறியுள்ளது.
ஜனவரி 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் வெள்ளிக்கிழமை ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்துள்ளன. இந்த நிலையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, திருப்பூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமையன்று விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது அரசு பள்ளிகளுக்கும் பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.